Friday, January 16, 2026 4:18 pm
நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
29.11.2025 அன்று வெள்ள அனர்த்தம் காரணமாக பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு, சுகாதார பரிசோதகரின் அனுமதி இன்றி உணவு வழங்க முற்பட்ட போது அதனை தடுத்த கிராம சேவையாளர் மீது தாக்கியதாக தெரிவித்து, கிராமசேவையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த சம்பவத்தை பொலிசார் 02.12.2025 அன்று நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அதன்போது வழக்கு 28.09.2025 தவணையிடப்பட்டிருந்தது.
குறித்த வழக்கினை நகர்த்தல் பத்திரம் மூலம் மீண்டும் 16-12-2025 அன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது அடுத்த வழக்கு இன்று என தவணையிடப்பட்டது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில் குறித்த வழக்கு இன்று பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கிராமசேவையாளர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இன்று நீதிமன்றில் ஆஜராகாது அவர்சார்பாக சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியிருந்தார்.
குறித்த வழக்குக்காக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் பொலிஸ் பிணையில் சென்றிருந்தார் எனவும், இன்று ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொள்வதனால் வரமுடியவில்லை எனவும் குறித்த சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.
கிராமசேவையாளர் சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ .சுமந்திரன் பொலிஸ் பிணையில் சென்றால் குறித்த தவணையில் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியது கடமை எனவும் ஆஜராகாது சட்டத்தரணியை அனுப்புவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடு என பதில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
எதிர்வரும் 20.01.2026அன்று வழக்கு தவணையிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பொலிசாருக்கு தெரிவித்தார்.

