Thursday, February 19, 2026 9:42 am
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று இரவு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
“AI Impact Summit 2026” உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வழங்கப்பட்ட விசேட இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
“AI Impact Summit 2026” உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று அந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கடந்த 17 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
செயற்கை நுண்ணறிவை (AI) மனித குலத்தின் நன்மைக்காகப் பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்கில், அரச தலைவர்கள் மற்றும் உலகின் தொழில்நுட்பத் துறையின் பிரதானிகளின் பங்கேற்புடன் புதுடெல்லியில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

