Monday, December 15, 2025 1:23 pm
நெடுந்தீவுக்கான படகுகள் சீரின்மையால் பல பொதுமக்கள் இடைநடுவில் அவதியுற்ற சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் வெள்ள நிவாரணம் கொண்டு செல்ல முற்பட்ட அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மக்கள் எனப் பலர் அடங்குகின்றனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் இன்று நெடுந்தீவில் ஆரம்பிக்கப்பட்டது. நெடுந்தீவு செல்வதற்காக அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் தயாராகியிருந்தனர். அனைவரையும் ஏற்றிச் செல்வதற்காக கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுந்தாரகை படகு வருகைதந்திருந்தது.

அரச அலுவலக உத்தியோகத்தர்கள், வங்கி முகாமையாளர்கள், வைத்தியர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் நிவாரணபணிகளை முன்னெடுப்பவர்கள் என பலரும் படகில் ஏறுவதற்கு நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.
இந்நிலையில் கடற்படையினர் 100 பேர்களை மாத்திரமே படகில் ஏற்ற முடியும் என கூறியுள்ளனர்.
நெடுந்தீவுக்கான குமுதினிப் படகும் தற்போது பழுதடைந்துள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரும் தனது பயணத்தை இரத்து செய்து யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மற்றும் ஏனைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடனும் இது தொடர்பாக தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட நிலையில் எவ்வித ஆக்கபூர்வமாக பதிலும் கிடைக்கவில்லை.
இறுதியில் நெடுந்தீவு பிரதேச செயலரின் முயற்சியில் இறந்தவரின் உடலைக்கொண்டு செல்லும் தனியார் படகு ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்களைக் கொண்டு செல்ல முயற்சித்தவேளை இறந்த உடலுடன் செல்வதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் குறித்த பயணமும் இரத்தானமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழ்நிலையில் நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் படகுக்காக அனைவரும் காத்திருக்கும் நிலை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


