Tuesday, November 11, 2025 11:17 am
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக, முன்னெடுக்கப்படும் போராட்டம் நேற்று திங்கட்கிழமை நூறாவது நாளை எட்டியுள்ளது. இதனை வெளிப்படுத்தும் முகமாக, நேற்று இரவு 7.30 மணியளவில் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில், அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னெடுக்கப்பட்ட தீப்பந்த எழுச்சி போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், போராட்டக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்தனர். இதன்போது பொதுமக்கள் சார்பில் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை உடன் நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்,மன்னார் தீவில் எந்த ஒரு இடத்திலும் கனிய மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது, தம்ப்பவனி நறுவிலிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் போன்ற கோரிக்கைகள் அரசிற்கு முன்வைக்கப்பட்டது.
அரசாங்கம் குறித்த 3 கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு, அதனை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் அறிவிக்கும் வரை, இந்த அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என போராட்டகுழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட தீப்பந்த எழுச்சி போராட்டம், இன்று செவ்வாய்கிழமை முதல் கிராமங்கள் தோறும் இடம்பெறும் என, போராட்டக்குழு சார்பாக அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார்.

