Friday, December 12, 2025 4:03 pm
பதுளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகள் பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்து 14 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினர்.
பதுளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி இன்று (12) காலை பயணித்த கெகிராவ இ.போ.ச சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் (Brake) செயலிழந்த போது , சாரதி பேருந்தை பாதுகாப்பு சுவரில் மோதி நிறுத்தி 14 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
காலை 6.35 மணியளவில் பதுளையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து பதுளை – மஹியங்கனை வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த போது , பதுளை துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பேருந்துன் பிரேக் செயலிழந்ததாகவும் , தான் உடனடியாக பேருந்தை பாதுகாப்பு சுவரில் மோதி நிறுத்தியதாகவும் சாரதி ஜனக துஷார தெரிவித்துள்ளார்.
மேலும் , சிறு கீறல் கூட ஏற்படாமல் பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டதாகவும், அவ்வாறு செய்திருக்காவிடின் பேருந்து ஆயிரம் அடி பள்ளத்தில் கவிழ்ந்து பாரிய விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் துஷார தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட பேருந்து நடத்துனர் , “நான் பயணிகளிடம் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுமாறு கூறினேன்.
சாரதி “மிகச் சரியாகக் கணித்து பாதுகாப்பு சுவரில் பேருந்தை மோதச் செய்து நிறுத்தினார்” எனக் கூறினார்.
பேருந்திற்கு மட்டும் சிறிய சேதம் ஏற்பட்டாலும், பயணிகள் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.
பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிய எச்சரிக்கையுடன் செயற்பட்டமையினால் 14 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறியிருந்தால் பேருந்து பின்னோக்கி உருண்டு கீழே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியிருக்கும் என பேருந்தில் இருந்த பயணிகள் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் இந்த வீதியில் பல கோர விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவை அனைத்திற்கும் பிரேக் கோளாறுகளே காரணம் எனவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

