Friday, December 12, 2025 3:32 pm
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் கண்டி , கேகாலை , குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய 4 மாவட்டங்களில் , 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதால் இந்த சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
மீகஹகிவுல மற்றும் தெமோதர ஆகிய பகுதிகளில் நேற்று (11) மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் , இது குறித்து மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
குறித்த பகுதிகளில் நிலவும் ஆபத்து நிலையைக் கருத்திற் கொண்டு வானிலை முன்னறிவிப்புகளுக்கு அமைய பதுளை , கேகாலை , குருநாகல் , நுவரெலியா , இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட ‘அவதானம்’ எச்சரிக்கையும் அவ்வாறே செயற்படுத்தப்படும்.
இதற்கு மேலதிகமாக கம்பஹா , குருநாகல் , இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட ‘விழிப்புடன் இருங்கள்’ என விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து பொதுமக்கள் உங்கள் பிரதேச செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவிப்புகளை கவனித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி , பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்குங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

