Monday, January 19, 2026 11:57 am
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் சிபிஐ விசாரணைக்காக இரண்டாவது முறையாக தவெக தலைவர் விஜய் டெல்லி சென்றுள்ளார்.
பிரசார கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பில் பலரிடம் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி தவெக தலைவர் விஜய்யிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் குறித்து சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது சுமார் 100ற்கும் அதிகமான கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
முதல்கட்ட விசாரணைகள் முடிந்த நிலையில் மீண்டும் அவரை இன்று டெல்லியில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் சி.பி.ஐ. விசாரணைக்காக 2ஆவது முறையாக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று மாலை 4 மணிக்குத் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இன்றும் சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணைகள் நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

