30 வருடங்களாக இலங்கைப் பொலிசாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் இருந்து வந்த யாழ்ப்பாண கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ்.நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில், அதன் உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.
அதன் படி காணிகளுக்கு சொந்தமான 07 உரிமையாளர்கள் 2019ஆம் ஆண்டு, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.இவ் வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.
எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பொலிசார் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை.
இந்த நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வருகை தந்து, அங்குள்ள பொலிசாரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளித்தனர்.
தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் தனித்து இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் தமக்கு காணி இல்லை என வேறு இடத்தில் நீண்ட காலமாக வசித்து வந்தனர். இன்றைய தினம் காணி கையளிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து கோப்பாய் பொலிஸ் நிலையம் அந்தப் பகுதியிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குச் சொந்தமான எட்டு வீடுகளில் பொலிஸ் நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் அதில் ஏழு வீடுகளை அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கமைய இன்று புதன்கிழமை குறித்த வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையம் மீண்டும் நிறுவப்படும் வரை கோப்பாய் பகுதியில் வசிப்பவர்களின் புகார்களை யாழ்ப்பாண பொலிஸார் தற்காலிகமாக கையாளுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



