Tuesday, December 9, 2025 8:02 pm
டித்வா புயலின் போது யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட போது அதிலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்காக துரித நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட மாணவர்களால் குறித்த கடிதம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச்சந்திப்பின் போது பல்கலைக்கழக மாணவர்களின் உடல், உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்ததுடன், மாணவர்கள் தமது சவாலான அனுபவங்களை ஆளுநருடன் பகிர்ந்துகொண்டனர்.

மேலும் வெள்ளம் சூழ்ந்த அந்த ஆபத்தான சூழலில் மீட்புப் பணியை முன்னெடுத்த மூன்று கடற்படை வீரர்கள் 24 மணி நேரத்துக்கும் மேலாகத் தம்முடன் தங்கியிருந்ததோடு, வெள்ளத்தில் வீழ்ந்த சிலரையும் உயிருடன் மீட்டனர் என்பதை கூறிக்கொண்ட மாணவர்கள், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அந்தக் கடற்படை வீரர்களைச் சிறப்பிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்குமாறு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆபத்தான சூழலில் தாமதமின்றி மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிய அனைத்துத் தரப்பினருக்கும், விசேடமாக மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வழிநடத்திய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட மாணவர்கள் இந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.


