Monday, December 15, 2025 4:31 pm
இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்று ஈரான் அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் 6 மில்லியன் லீற்றர் எரிபொருளை கடத்தியதாகக் குற்றம் சுமத்தி , ஓமான் வளைகுடா கடற்பரப்பில் வைத்து குறித்த கப்பல் ஈரான் அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் இலங்கையர்களைத் தவிர இந்திய மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிறுத்துவதற்கான உத்தரவுகளை மீறியமை , தப்பிச் செல்ல முயற்சித்தமை மற்றும் கப்பலின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் போன்ற காரணங்களின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) மாலை குறித்த கப்பல் தமது பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகில் குறைந்த எரிபொருள் விலைகளைக் கொண்ட ஈரானில் இருந்து ஏனைய நாடுகளுக்கு கடல் மார்க்கமாக எரிபொருள் கடத்தல்கள் அதிகமாக இடம்பெறுவதாகவும் வெளிநாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.
மேலும், கடந்த சில வாரங்களில் ஈரான் இவ்வாறான பல கப்பல்களை தமது பொறுப்பின் கீழ் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

