Wednesday, December 3, 2025 10:16 am
நாட்டில் நிலவிய அனர்த்தங்களால் 2025ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் பரீட்சை நிறைவடைந்த பின்னர், அனைத்து விடைத்தாள்களும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும். இது பல ஆண்டுகளாக முறையாக நடந்து வரும் ஒரு நடைமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே , நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையின் அனைத்து விடைத்தாள்களும் தற்போது பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை கருத்தில் கொண்டு அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி, மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

