Thursday, January 8, 2026 3:52 pm
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27,28ம் திகதிகளில் இடம்பெற இருக்கின்றது.
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா, இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பங்கேற்கும் ஒரு முக்கிய நிகழ்வாகவும் காணப்படுகின்றது.
இதற்காக கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை (08) இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார், கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள், பொலிஸார், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர், துறை சார் திணைக்களின் தலைவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த கலந்துரையாடலில் இலங்கையிலிருந்து 4000 பக்தர்களும் இந்தியாவிலிருந்து 4000 பக்தர்களும் பங்குபற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, பங்குபற்றுவோருக்கான சுகாதாரம், உணவு, போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

.

