Tuesday, November 4, 2025 9:01 am
“நீதித்துறை புனிதமானது, யாரையும் குறை சொல்லும் இடத்தில் நான் இல்லை” பதவி உயர்வு வழங்கப்படாததால், விரும்பாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்ததாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போது அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதிகளில் தான் முதலாவது இடத்தில் இருந்தபோதிலும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என எம். இளஞ்செழியன் சுடடிக்காட்டினார்.
தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால் மேன்முறையீடு மற்றும் உயர் நீதிமன்றங்களில் தலா இரண்டு ஆண்டுகள் என இன்னும் நான்கு ஆண்டுகள் சேவை செய்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட தான் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவைச் சந்தித்தபோது, தனது ஓய்வு குறித்து நினைவூட்டியதாகவும் இருந்த போதிலும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டவில்லை என்பதை கனத்த இதயத்துடன் வெளிப்படுத்தினார்.
இந்த அநீதி தொடர்பாக “நான் விரும்பி ஓய்வு பெறவில்லை; கட்டாயப்படுத்தி ஓய்வு பெறப்பட்டேன்” என்று தான் எழுதிய நான்கு கடிதங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், “நீதித்துறை புனிதமானது, யாரையும் குறை சொல்லும் இடத்தில் நான் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாம் நீதி, நியாயம், சட்டம், நீதிமன்றம் ஆகிய நான்கை தவிர, வேறு எதற்கு முன்னாலும் தலைகுனிந்ததில்லை என்றும் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

