Tuesday, October 28, 2025 12:19 pm
யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களிலும்,போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரின் நண்பனின் கையடக்கத் தொலைபேசியில் கைத்துப்பாக்கிகள் காணப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நல்லூர் – அரசடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கடந்த வாரம் பொலிஸார் போதைப்பொருளுடன் கைது செய்திருந்தனர். குறித்த இளைஞனிடமிருந்து சிறிய வாள் ஒன்றினையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த இளைஞனின் நண்பர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், நேற்று திங்கட்கிழமை ஒரு இளைஞனை பொலிஸார் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
இதன் போது, அவரது கையடக்க தொலைபேசியையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். அதன் போது வாட்ஸ் அப் செயலியில் இன்னுமொரு இளைஞன் கைத்துப்பாக்கியுடன் காணப்படும் படத்தினை அனுப்பி இருந்தமையை பொலிஸார் கண்டறிந்திருந்து அது தொடர்பில் இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட இளைஞன் தொடர்பிலான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

