Saturday, December 13, 2025 1:23 pm
AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் தெரிவித்துள்ளார்.
Geo செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் தகவல் முறைமை (Geographic Information System – GIS) ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது.
இலங்கை அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் (Association of Natural Disaster Risk Management Professionals) சங்கமானது, அமெரிக்க தூதரகத்தின் ஆதரவுடன் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந் நிகழ்வில், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல், இலங்கை அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் இலங்கையில் ஏற்படும் அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியவும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், அவர்களை தயார்ப்படுத்தவும் முடியும். இதனால் இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போதான உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும்.
இந்த திட்டமானது , இலங்கையின் தொழில்நுட்பம் சார்ந்த அனர்த்த தாங்கும் திறன் செயல்முறையை பிரதிபலிப்பதோடு , தொழில்நுட்பங்களின் உதவியுடன் இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறிந்து உயிர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது.
Geo செயற்கை நுண்ணறிவு மூலம் வெள்ளம், மண்சரிவு மற்றும் வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களை துல்லியமாக கண்டறிந்து மதிப்பீடு செய்ய முடியும்.
புவியியல் தகவல் முறைமை (Geographic Information System – GIS) மூலம் வீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள், பாதுகாப்பற்ற பகுதிகள் மற்றும் அனர்த்தத்தினால் சேதமடைந்த பகுதிகளை வரைப்படமாக காட்சிப்படுத்த முடியும்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்க தூதரகம் வழங்கும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, அனர்த்தங்களால் ஏற்படும் பாரிய சவால்களை முறியடிப்பதற்கும் , இலங்கையில் ஏற்படும் அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும் , பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் , அவர்களை தயார்ப்படுத்தவும் இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போதான உயிர் ஆபத்துக்களை குறைத்துக் கொள்ளவும் இந்த திட்டம் மிகப் பெருமளவில் உதவும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

