Monday, March 23, 2026 10:15 am
நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையினால் சிறுவர்கள் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்ப பக்கவாதத்துக்குள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெப்பமான காலநிலையில் சிறுவர்களின் உடலில் நீர்ச்சத்து விரைவாகக் குறையக்கூடும். எனவே, அவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான பானங்களை (இளநீர், பழச்சாறு) அடிக்கடி வழங்க வேண்டும். சிறுவர்களிடம் உடற்சோர்வு, பசியின்மை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் திரவ உணவுகளை வழங்க வேண்டும்.
தற்போது பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போதியளவு நீர் அருந்தாமல் விளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்கள் வெப்பவாதத்துக்குள்ளாகக்கூடும்.
வெப்பத்தாக்கத்தினால் இதயம் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படலாம். இது வலிப்பு, மயக்கம் ஏற்படுத்தக்கூடும் என வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடும் வெப்பத்தினால் சிறுவர்களுக்கு வியர்க்குரு, தோல் அரிப்பு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
சிறுவர்களை ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு தடவைகள் குளிப்பாட்ட வேண்டும். அவர்கள் சுமார் 20 நிமிடங்கள் வரை நீரில் விளையாட அல்லது இருக்க அனுமதிப்பது உடல் வெப்பத்தைத் தணிக்கவும் தோல் நோய்களைத் தவிர்க்கவும் உதவும்.
வெப்பம் உச்சமாக இருக்கும் நேரங்களில் சிறுவர்களை நேரடியாகச் சூரிய ஒளியில் விளையாட அனுமதிப்பதைத் தவிர்க்குமாறும், விளையாட்டுப் போட்டிகளின் போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறுவர்கள் நீர் பருகுவது தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

