Monday, December 8, 2025 4:28 pm
நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை (08) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின் படி , 192 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
சீரற்ற காலநிலையினால் 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
அதன்படி அங்கு 234 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை , குருநாகலில் 61 மரணங்களும் , கேகாலை மாவட்டத்தில் 32 மரணங்களும் , புத்தளத்தில் 37 மரணங்களும் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 28 மரணங்களும் நுவரெலியா மாவட்டத்தில் 89 மரணங்களும் , பதுளை மாவட்டத்தில் 90 மரணங்களும் பதிவாகியுள்ளன.
அத்துடன் , 22,218 குடும்பங்களைச் சேர்ந்த 69,861 நபர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனர்த்த மரணங்களைத் தணிப்பது என்பது வெறும் புள்ளிவிபரங்களைக் குறைப்பது மட்டுமல்ல , ஒவ்வொரு உயிரின் மதிப்பையும் உணர்ந்து , எதிர்காலத் தலைமுறையினருக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதாகும். இதற்கு ஒருங்கிணைந்த , தொடர்ச்சியான மற்றும் தொலைநோக்குடைய அணுகுமுறையொன்று அத்தியாவசியமானதாகும்.

