Friday, January 9, 2026 1:51 pm
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 12 வயது சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கம் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஒவ்வாமை காரணமாக குறித்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 21 ஆம் திகதி உயிரிழந்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போது வைத்தியசாலை மற்றும் மாகாண மட்டத்தில் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்த அறிக்கைகளின் படி மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
வைத்தியசாலையின் பணிக்குழாமினரின் அசமந்த போக்கினாலேயா இந்த மரணம் இடம்பெற்றுள்ளது? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். அந்த விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையாத விடயங்களை எதிர்வரும் நாட்களில் வௌிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு உயிரிழந்த 12 வயது சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் 17 கேள்விகளை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இன்று சபையில் வினவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

