Saturday, November 1, 2025 10:05 pm
போக்குவரத்து பொலிஸாருடன் முரண்பட்ட பெண்ணை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர், தாம் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் சகோதரி எனக்கூறி போக்குவரத்து பொலிஸாருடன் முரண்பட்டார்.
இச்சம்பவம் இன்றையதினம் உடுகம்பொல சதிபொல எனும் பகுதியில் இடம்பெற்றது.
குறித்த பெண் காரை ஓட்டிச் சென்றபோது கடமையில் இருந்த பொலிஸார் இருவர் இடைமறித்துள்ளனர். எனினும் பொலிஸாரின் சமிக்ஞையினை மீறி பெண் காரினை ஓட்டி சென்றுள்ளார்.
எனினும் பொலிஸார் பின்தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர். கைது செய்கின்ற போது பொலிஸ் உயர் அதிகாரியின் சகோதரி என கூறி பொலிஸாருடன் முரண்பட்டுள்ளார். இதன்போது குறித்த பெண் பொலிஸாருடன் முரண்படும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
அதன் பின்னர் கைதுசெய்யப்பட்ட பெண் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் சகோதரி இல்லை என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
பெண்ணுக்கு எதிராக அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சமிஞ்கையை மீறியமை, குற்றவியல் அத்துமீறல் மற்றும் வேறொருவர் போல ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கம்பஹா நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

