Wednesday, October 29, 2025 3:38 pm
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கை 2026 ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையின்படி ரணில் விக்ரமசிங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அரச தலைவராகப் பணியாற்றியபோது, பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, லண்டனுக்குச் செல்ல அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க ஆஜரான போது கடந்த ஆகஸ்ட் 22 ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதியின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த கோட்டை நீதிவான் தலா 5 மில்லியன் ரூபாய் மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டு வழக்கை இன்று(29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

