Wednesday, December 10, 2025 11:27 am
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது , மலையொன்று சரிந்து விழுந்ததில் கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர்.
மண்ணுக்குள் புதையுண்டிருந்த 7 பேரின் சடலங்களைத் தேடுவது மிகவும் கடினமாக இருந்த தருணத்தில் , அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் மண்ணுக்குள் புதையுண்டிருந்த வீட்டார்களைக் கண்டுபிடித்துக் கொடுத்த சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்ட போதிலும் , அப்பகுதி இன்னும் மண்ணால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. மண்ணுக்கு அடியில் புதையுண்ட வீட்டின் இடிபாடுகளைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இச் சம்பவம் மாத்தளை , பல்லேபொல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அம்பொக்க கிராமத்தில் இடம்பெற்றது.
அம்பொக்க கிராமத்தின் மலைத்தொடரில் மண்சரிவு அபாய நிலை காணப்படுவதால் பொதுமக்கள் அதிகாரிகளால் அடிக்கடி வெளியேற்றப்படுகின்றனர்.
எனினும் , உரிய அறிக்கையோ அல்லது ஆய்வோ இன்றி இவ்வாறு வெளியேறுமாறு கூறப்படுவதால் தமக்கென ஒரு நிலையான சூழலை உருவாக்கிக்கொள்வது கடினமாக உள்ளதாக அப் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிராமத்தின் அனர்த்த நிலைமை குறித்து உரிய அறிக்கையை விரைவில் வழங்குமாறு மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

