Friday, November 7, 2025 1:34 pm
நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்திய விவகாரம் தொடர்பில், நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அமைந்துள்ள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வீதி அமைப்பு பணியின் போது, அதே பகுதியில் உள்ள தொல்பொருள் சின்னம் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்து தொல்லியல் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்த பணியில் ஈடுபட்ட இரண்டு பேர் நெடுந்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட நான்கு பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நான்கு பேரும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படும் நெடுந்தீவு வெடியரசன் கோட்டையானது, சில வருடங்களுக்கு முன்பு அந்த பகுதி பௌத்த வரலாற்றுடன் தொடர்புடைய பகுதி என கடற்படையினரால் பதாகை போடப்பட்டு, பின்னர் அந்த பதாகை நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

