Friday, November 14, 2025 4:42 pm
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் பொலிஸ் மா அதிபர், முன்னாள் கடற்படை தளபதி, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உடனடியாக தங்கள் நிரந்தர வதிவிட முகவரிகளை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற “அரகலய” போராட்டத்தின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பில், விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனக் டி சில்வா, சோஹித ராஜகருணா மற்றும் மேந்தா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் தங்கள் நிரந்தர வதிவிட முகவரிகளை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

