Saturday, December 13, 2025 2:56 pm
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இத் திட்டமானது மண்சரிவுகளால் வீடுகளை இழந்த மக்களுக்குப் பாதுகாப்பான மாற்று இடங்களை வழங்குவதையும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவித்து மீள்குடியேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டது.
இதற்கமைய , மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றிய பின்னர் , அக்காணிகளை மீண்டும் அளவீடு செய்ய வேண்டும் எனக் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார்.
அபாய வலயங்களில் உள்ள காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றத் தீர்மானித்தால் , அனுமதிப்பத்திரம் கொண்ட அக்காணிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்து நட்டஈடு அல்லது மாற்றுக் காணி ஒன்றை வழங்கக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் தயாராக உள்ளது.
இதற்கமைய , சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடமிருந்து கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது குறித்து ஏற்கனவே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள காணி அலுவலகங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகக் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார்.
இந்தத் திட்டம் , இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாத்து , அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவும் ஒரு முக்கிய அரச மற்றும் சமூக நடவடிக்கை எனலாம்.

