Thursday, July 16, 2026 11:09 am
மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில், ஒரே நாளில் 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘சட்டம் அனைவருக்கும் சமமானது’ என்பதை நிரூபிக்கும் வகையில், தனியார் இடங்கள் மட்டுமன்றி, அரச நிறுவனங்கள் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி சுகாதார துறை மற்றும் முப்படை இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். மன்னார் நகர சபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விசேட வேலைத்திட்டம் நேற்று புதன்கிழமை (15) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அரச அலுவலகங்கள் , விடுதிகள் இவர்த்தக நிலையங்களில் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது டெங்கு நுளம்பு பெறுகுவதற்கு காரணமான இடங்கள் அடையாளம் காணப்பட்ட போது டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில் , 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

