வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக 33 வயது இளைஞர் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன்னர் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது.
இது தொடர்பாக வீட்டில் வசிப்பவர்கள் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவிற்கு முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டிற்கு அமைய, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயக்கொடியின் வழிகாட்டலில், குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் சமரவீர, பொலிஸ் சார்ஜன்ட்களான திசாநாயக்க, திலீப், ஜெயதுங்க, உபாலி, உடுவெல்ல ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, வவுனியா, ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், தாலிக்கொடி, சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 25.5 பவுண் தங்க நகைகள், 66 இலட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியுடைய தங்க நகைகள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.