இராணுவத்தின் பிடியிலுள்ள வலி வடக்கு காணிகளை விடுவிக்கக்கோரி, இன்று (21) காணிகளை இழந்த வலி வடக்கு மக்களினால் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் நடைபெற்றது.
வலி வடக்கு காணி உரிமம் தொடர்பில் இலங்கை அரசால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டு மக்களின் காணி நிலங்கள் மக்களுக்குரியதென்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திய மனித உரிமை செயற்பாட்டாளரும் குறித்த விடயத்தின் ஏற்பாட்டாளருமான யே.யாட்சன் பிகிறாடோ- மெசிடோ வர்த்தமானி உடனடியாக இரத்துச் செய்யப்படவில்லையேல் இதுவரை விடுவிக்கப்பட நிலங்களும் சட்டபூர்வமாக மக்களுக்குரியதாக இல்லாது போகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
இன்னமும் 2808 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது. ஆனால் யாழ் மாவட்டச் செயலகம் 2800 ஏக்கர் நிலம் என கூறுகின்றது. இவ்விரு அரச நிறுவனங்களும் முதலில் ஒரு சமநிலையில் தகவல் பதிவை கொண்டிருக்க வேண்டும். அதேவேளை மாவட்ட செயலர் எதேச்சத்தனமாக தகவல்களையும் தெரிவிக்கக் கூடாது.
இதேநேரம் 2013 ஆம் ஆண்டு இது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 6317 ஏக்கர் நிலம் இராணுவத்தின் பிடியில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அத்துடன் அவை அனைத்தும் அரச காணிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த ஆட்சியாளர்களால் பல ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டன. வீதிகள், ஆலயங்களும் மக்களிடம் கையளிக்கப்பட்டன. ஆனால் இந்த வர்த்தமானியின் பிரகாரம் இன்னமும் அரச காணிகளாகவே மக்களின் காணிகள் இருக்கின்றன. எனவே குறித்த வர்த்தமானியை உடனடியாக இரத்து செய்யவேண்டும். இதற்கு இன்றைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இரத்துச் செய்தால் மட்டுமே மக்களின் காணி மக்களுக்குரியதாகும். இல்லையேல் அவை சட்டவிரோதமானவையாகவே இருக்கும்.
மேலும் மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி காணிகளை விடுவிப்பதுடன் இவ்வளவு காலமும் அக்காணிகளை வைத்து விவசாயம் உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்ததற்கான குத்தகை இழப்பீடும் உரிய நபர்களுக்கு வழங்குவதுடன் வர்த்தமானியையும் இரத்துச்செய்ய வேண்டும்.
இதற்குரிய நடவடிக்கையை ஐனாதிபதி விரைந்து எடுக்க வேண்டும். இல்லையேல் ஐனாதிபதி செயலகம் முன்பாக தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளனர்.