லண்டன், டேவிஸ்டோக் சதுக்கத்தில் (Tavistock Square) அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலையை இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு, லண்டனில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
தியான நிலையில் உள்ள காந்தியின் இந்தச் சிலை, அங்குள்ள ஒரு முக்கிய அடையாளமாகப் போற்றப்படுகிறது.
ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி இங்கு வழக்கமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சர்வதேச அஹிம்சை தினத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இடம்பெற்ற நாசவேலை வெட்கக்கேடான செயல் என்பதுடன், அஹிம்சை கருத்து மற்றும் காந்தியின் மரபு மீதான வன்முறைத் தாக்குதல் என லண்டனில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உடனடி மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்குமாறு லண்டன் அதிகாரிகளை இந்திய உயர்ஸ்தானிகரகம் வலியுறுத்தியுள்ளது.