யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் முகமாக இராணுவத்தினால் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கமைய இராணுவ தளபதியின் வழிகாட்டலில் யாழ் மாவட்டம் முழுவதும் இன்று (29) கரையோர பகுதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பிரதான நிகழ்வு இராணுவத்தின் 51ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பகுதியில் காலை 7 மணியளவில் ஆரம்பமானது.
யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக்க குமார, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பி.என்.ஏ.முத்துமால, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா.சுதர்சன், நல்லூர் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார், யாழ் மாநகர சபை பிரதி முதல்வர் இ.தயாளன், யாழ் மாநகர சபை ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பமானது.
இராணுவம் உள்ளிட்ட முப்படையினர், பொலிஸார், யாழ்ப்பாண மாவட்ட செயலக, யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர சபை, இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.