சிங்கள திரையுலகின் புகழ் பூத்த பிரபல நடிகையான மாலனி பொன்சேகா கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (24) அதிகாலை காலமானார்.
“இலங்கை சினிமாவின் ராணி” என்று போற்றப்படும் மாலினி பொன்சேகா தனது 78வது வயதில் காலமானார்.
150க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் ஏராளமான பாராட்டுக்களைக் கொண்ட அவரது சினிமா பாரம்பரியம் ஈடு இணையற்றது.
ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திஸ்ஸ லியன்சூரியவின் “புஞ்சி பபா” என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
1978 ஆம் ஆண்டு பைலட் பிரேம்நாத் தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார்.
அத்துடன் யார் அவள் (1976), மல்லிகை மோகினி (1979), பனி மலர் (1981) ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஏப்ரல் 2010 இல், மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.