காசாவின் போர் நிறுத்த முயற்சிகள், மீதமுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒரு விரிவான ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துவதாக இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பான எகிப்திய அதிகாரிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக, தமது குழு கெய்ரோவுக்கு சென்றுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் இஸ்ரேலுக்கும், ஹமாஸிக்கும் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர், இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை விரிவுபடுத்தியது அத்துடன், காசா பகுதியைக் கைப்பற்றுவதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தையும் அறிவித்தது.
இருப்பினும், காசாவை கைப்பற்றும் புதிய நடவடிக்கை ஒக்டோபர் வரை ஆரம்பிக்காது என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இராணுவத் தயாரிப்புகளுக்கு நேரம் ஒதுக்குவது மற்றும் துணை படையினரை இணைத்துக் கொள்வது போன்ற தயாரிப்புக்களை இஸ்ரேல் மேற்கொள்ள வேண்டியிருப்பதே இதற்கான காரணமாகும் என, இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையில், காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்கின்றன.
ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சக தகவல்படி, நேற்று (13) மாத்திரம் குறைந்தது 123 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.