Thursday, December 18, 2025 4:49 pm
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த புகையிரத சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அவரது அறிவிப்பின்படி புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதிகள் பின்வருமாறு:
டிசம்பர் 20 முதல் பதுளை – அம்பேபுஸ்ஸ இடையிலான மலையக புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனவரி 1 முதல் புகையிரத சேவைகள் வடக்கு மார்க்கமாக காங்கேசன்துறை வரை நீடிக்கப்படும்.
புத்தளம் புகையிரத பாதை சேவைகள் சிலாபம் வரை விரிவுபடுத்தப்படும்.
மட்டக்களப்பு புகையிரதப் பாதை முழுமையாகத் திறக்கப்பட்டு புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பும்.
பெப்ரவரி 1 முதல் மன்னார் மற்றும் தலைமன்னார் நோக்கிய புகையிரத சேவைகள் முழுமையாக இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அண்மைய அனர்த்தங்களால் புகையிரத பாதைகளில் ஏற்பட்ட பாதிப்புகளை திருத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் , பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

