கிளிநொச்சியில் ரயில் கடவையை கடக்க முயன்றவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தினால் புகையிரத சேவையும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது.
குறித்த விபத்து இன்று காலை 12 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள புகையிரதம் கடவையினை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொன்னளகு அனுசன்ராஜ் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த புகையிரதம் சுமார் 30 நிமிடங்கள் வரை அப்பகுதியில் தரித்து நின்றதுடன், சடலம் உறவினர்களால் பொறுப்பேற்ற பின்னர் யாழ் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
புகையிரத ஊழியர்கள் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்ததுடன், கிளிநொச்சி பொலிசாரும் மக்களும் புகையிரத ஊழியர்களுடன் பேசி சடலத்தை உறவினர்களிடம் கையளித்தனர்.
தொடர்ந்து குறித்த சடலம் மலர்ச்சாலை வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டது.
விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்கை முறையாக இயங்குவது இல்லை என பிரதேச மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
தானியங்கி சமிக்கை கட்டமைப்பில் ஏற்படும் கோளாறுகளால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.