கண்டி நகரில் தற்போதுள்ள நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனைக் கடைகள் அமைந்துள்ள இடங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
கண்டி நகருக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து வௌியிடுகையில், கண்டி நகரில் குறைந்தளவான மக்களே வீதியைக் கடக்க நிலத்தடி சுரங்கப்பாதைகளை பயன்படுத்துகின்றனர். மக்கள் இதை பயன்படுத்தாமல் இருப்பதற்கு நிலத்தடி சுரங்கப் பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனைக் கடைகளும் காரணமாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. மக்கள் பாதுகாப்பான முறையில் வீதியை கடக்க வேண்டியது அவசியம் என்பதோடு, மலர் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் எமது தீர்வு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றார்.