தமிழ் மக்களின் நீடித்து நிலைத்து போயுள்ள அரசியல்தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசுவதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி ஒத்தி வைப்பு பிரேரணை, முழுநாள் விவாதமாக பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று (08) கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த மாதம் 23ஆம் திகதி பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் சபாநாயகருக்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நில அபகரிப்பு, மனித புதைகுழிகள் தொடர்பான விடயங்கள் பேசுவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிடைத்துள்ளது.
குறித்த ஒரு நாள் விவாதத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட மனித புதைகுழிகளுக்கான சர்வதேச விசாரணை, காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தவுள்ளோம் என தெரிவித்தார். அத்துடன் நேற்றைய தினம் மன்னார் காற்றாலை தொடர்பான சந்திப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.