முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (02) காலை தாவடியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது.
02.09.1985 இல் தாவடி பகுதியில் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்களில் ஒருவரும், உடுவில் – மானிப்பாய் தொகுதியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) ஆகியவற்றின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தந்தையாருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 40 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தாவடியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வில் அன்னாரின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சிர்த்தார்த்தன் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதோடு நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்
05.02.1918 ஆம் ஆண்டு யாழ் கந்தரோடையில் பிறந்த விஸ்வநாதர் சரஸ்வதி தம்பதிகளுக்கு மகனாக பிறந்த தர்மலிங்கம் சிறு வயது முதல் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துப் அதன் பயனாக முதன் முதலில் உடுவில் கிராம சபையின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இப் பதவியில் ஐந்துக்கு மேற்பட்ட தடவைகள் தொடர்ச்சியாக இருந்தார் அதனைத் தொடர்ந்து சுன்னாகம் பட்டின சபையின் தலைவராகவும் பதவி வகித்தார்.
1960 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியில் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டு முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். அன்றிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை வரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்ததுடன் அத்தனை தேர்தல் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுகின்ற அளவுக்கு மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்றவர். விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்கள் ஐந்து தடவைகள் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமரர் தர்மலிங்கத்தின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பா.தனபாலன், வவுனியா மாநகர சபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஸ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.