யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் இன்று (22) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல்கலைக்கழக நூலகக் கேட்போர்கூடத்தில் திரையிடப்படவுள்ளன.
யுத்தத்தின்போது தங்கள் அன்புக்குரிய உறவுகளை இழந்தோரின் நினைவுகளை ஞாபகப்படுத்தும் ‘தடயம்’ , அக்குபஞ்சர் வைத்தியமுறையின் சாதக பாதகத் தன்மைகளைகளைப் பேசும் ‘அக்குபஞ்சர்‘ , மலையகத்தில் ஹட்டன் பிரதேசத்தில் களிமண்ணால் மேற்கொள்ளப்படும் ஆபரணக் கைத்தொழில் தொடர்பான ‘ரெரகொட்டா ஜீவல்ஸ்’,
முல்லைத்தீவு குமுளமுனை கிராமத்தில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களின் கதையான ‘கொலைக்களம்’, நெடுங்கேணி ஊஞ்சல்கட்டிப் பிரதேசத்தில் நிகழ்ந்துவரும் யானை மனித முரண்பாட்டை வெளிக்கொண்டுவரும் ‘வேழம்’, திருகோணமலையில் வெல்கம் விகாரை வழியான சிங்கள பௌத்தமயமாக்கத்தைச் சொல்லும் ‘ஈழம்’,
மட்டக்களப்பு – கல்லடி பிரதேச பறங்கியர் சமூக மக்களின் வாழ்வியல் பற்றிய ‘படிமம்’, மஸ்கெலியா பிரதேசசபைக்கு உட்பட்ட கிராமங்களில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை விபரிக்கும் ‘லயத்துக்குயில்’,
யுத்தத்தில் உடல் அங்கங்களை இழந்து சிரமத்தின் மத்தியில் அன்றாட வாழ்க்கையை வாழும் கேப்பாப்பிலவு கிராம மக்களின் பதிவான ‘ரணம்’, மயானங்களில் அவை சார்ந்து சேவை வழங்கும் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்களைப் பதிவு செய்யும் ‘அறியாப்பாதை’ ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
