மன்னாரில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலை கண்டித்து, இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் நேற்று (10) மாலை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றான இல்மனைட் கனிம மணலை கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று அகழ முயற்சித்து வருகிறது.
இந்த அகழ்வைத் தடுக்கவும், மக்களின் பூர்வீக நிலங்களையும் இருப்பையும் பாதுகாக்கவும் “கருநிலம் பாதுகாப்பு” என்ற கருப்பொருளுடன் மக்களை விழிப்புணர்வு செய்யும் போராட்டத்தை முன்னெடுக்க இளையோர் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் விழிப்புணர்வு போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், இளையோர் என பலரும் கலந்துகொண்டதுடன் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

