வடமராட்சிக் கிழக்கு, நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் ஏழாம் திருவிழாவான மாம்பழத்திருவிழாவாகிய நேற்று(14) மாம்பழம் ஒன்று ஒரு மில்லியன் ரூபாவிற்கு (1,000,000) ஏலமிடப்பட்டுள்ளது.
ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா, கடந்த 08 திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.
இதன் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரவு முருகனுக்கும் விநாயகப் பெருமானிற்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலகத்தை சுற்றி முதலில் வலம் வருபவருக்கே மாம்பழம் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, முருகப் பெருமான் மயில் ஏறி உலகைச் சுற்ற செல்ல விநாயகப் பெருமான் சிவனையும் உமாதேவியாருமான பெற்றோரை வலம் வந்து மாம்பழத்தை பெற்றுக்கொண்ட நாடகம் அரங்கேறியது.
குறித்த நாடகம் இடம் பெற்றதைத் தொடர்ந்து மாம்பழம் ஏலமிடப்பட்டது.
இதில் 10,000 ரூபாய்க்கு மாம்பழம் முதலில் ஏலம் கூறப்பட்டு சில நொடிகளில் 06 இலட்சம் ரூபாய் வரையில் சென்று பின்னர் படிப்படியாக உயர்ந்து சில நிமிடங்களில் 10 இலட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

